பட்டபகலில் கொலை.. வெட்கக்கேடு.. இனியாவது அனுமதிக்கனும்.. - இபிஎஸ் கோரிக்கை..

 
eps

பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரில் கொலை நடந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  

 இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாருமாகிய எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," நேற்று (18-11-2022) காலை, சென்னை எழும்பூர் காவல்நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று செய்திகள் வருகின்றன.

கொலை

சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக் கேடானதாகும். திமுக ஆட்சிக்கு வந்தபின் போதைப் பொருட்கள் விற்பவர்கள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் எல்லாம் லைசென்ஸ் பெற்றதுபோல் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நேற்றுக் காலையில் அரங்கேறிய வாலிபர் படுகொலை மூலம் நிரூபணமாகியுள்ளது.

 திமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை பொது மேடையிலேயே, காவலர்கள் பாதுகாப்புக்காக இருக்கும் போதே, பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுகின்றனர்.    இந்த அரசு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, மத்திய உளவுத்துறை அவ்வப்போது வழங்கும் முன்னெச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிடுகிறது.

ஸ்டாலின்

இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார் - சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று சென்னை எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பை வகிக்கும் திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடைபெறுகிறது.  இனியாவது, இந்த திமுக அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.