தேரோடும் வீதிகளில் இனி மின் இணைப்புகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தேர் திருவிழா நடைபெறும் வீதிகளில் இனி வரும் காலங்களில் மின் இணைப்புகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் 94வது அப்பர் குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று இரவு சப்பரம் தேர்திருவிழா நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான பொதுமக்கள்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தபோது திடீரென மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியது. இதில் மின்சாரம் பய்ந்து 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் இருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 17 பேர் காயமடைந்தனர். தேரை இழுத்து வரும்போது அப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்ததால், 50க்கும் மேற்பட்டோர் சற்று தொலைவில் இருந்துள்ளனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர், இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் இனி மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.