விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்.. ரூ. 48.59 லட்சம் அபராதம் வசூலிப்பு

 
போக்குவரத்து விதி மீறல் : சென்னையில்  ரூ. 48.59 லட்சம் அபராதம் வசூலிப்பு


சென்னையில் விதிகளை மீறி  வாகனம் ஓட்டிய 4,083 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 48.59 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வதன் மூலம் சாலை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் நாள் தோறும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சராசரியாக 6,000 விதிமீறல் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது. விதிமீறல்களில் ஈடுப்பட்டவர்கள், சரியான நேரத்தில் அபராதத்தொகையை செலுத்துவதில்லை. அவ்வாறு அபராதத்தொகையை செலுத்ததவர்களை, தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11.04.2022 தொலைபேசி அழைப்பு மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 போக்குவரத்து  விதிமீறல்

விதிமீறல்களில் ஈடுப்பட்டவர்களை இந்த அழைப்பு மையம் மூலம், அவர்களது அபராதத்தொகை நிலுவை குறித்து விவரங்கள் தெரிவித்த பின்னரும் பலர் அபராதத்தொகையை செலுத்தாமல் இருந்தனர். தொடர்ச்சியாக கடந்த 12.01.2023 அன்று சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் விதிமீறிய 1,022 பேரிடம் அபராதத்தொகையாக சுமார் ரூபாய்.11,28,810/- வசூலிக்கப்பட்டு 1,615 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்.. ரூ. 48.59 லட்சம் அபராதம் வசூலிப்பு - போக்குவரத்து காவல்துறை..

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்கும் பொருட்டு, கடந்த 19.01.2023 மற்றும் 20.01.2023 ஆகிய இரு தினங்களில் சென்னை நகரின் முக்கிய சாலைகளில் 168 இடங்களில் ஒரு காவல் நிலைய எல்லைக்கு மூன்று இடங்கள் வீதம் சிறப்பு வாகன சோதனை சாவடிகள் நிறுவப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் விதிமீறல்களில் ஈடுப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து நிலுவையில் உள்ள அபராதத்தொகையை கடன் அட்டை, கியூஆர் குறியீடு மற்றும் இணையதள கட்டணம் ஆகியவை மூலம் அபராதத்தொகை செலுத்த ஊக்கப்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் விதிமீறல்களில் ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூபாய் 48,59,300/- வசூலிக்கப்பட்டு 16,072 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. அதிகபட்சமாக புனித தோமையர் மாவட்டம், துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தினர் அபராதத்தொகையை வசூலித்துள்ளனர். வரும் காலங்களில் சிறப்பு முகாம்கள் தொடரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.