வதந்திகளை நம்பாதீர்.. கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர் வேண்டுகோள்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரவண்குமார் ஜடாவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகமும், இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர் தரப்பிலும் சொல்லப்படுகிறது. மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம், சில மர்ம நபர்களால் கலவரமாக மாறியது. இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தமிழக வேளாண்துறையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்த ஸ்ரவண்குமார் ஜடாவத், புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இவர் கள்ளக்குறிச்சி மாவட் டத்தின் 3-வது ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரவண்குமார், “மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்களால், பல்வேறு தகவல் பரவுகின்றன. இக்கட்டான தருணத்தில் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மாணவி உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எனவே மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சென்றடையை முழுவீச்சில் பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.