உடன்பாடு இல்லை - ஓபிஎஸ் தரப்பு கோரிக்கைக்கு தலைமை நீதிபதி சொன்ன பதில்

 
op

அதிமுக பொதுக்குழு  வழக்கை நாளை முதல் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக இருக்கிறது.   இந்த நிலையில் பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக்கூடாது வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து கோரிக்கை விடுத்திருந்தார்.  ஆனால், வழக்கை அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

 கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வமும்,  அவரது ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம்  தலையிட முடியாது.   சட்டப்படி பொதுக்குழுவினை நடத்திக் கொள்ளலாம்.  விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

h

 இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம்- வைரமுத்து ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் .  இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்.  அதுவும் வழக்கை இரண்டு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து இந்த வழக்குகளை நாளை முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக இருக்கிறது.

 இந்த நிலையில் வைரமுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.  அந்த மனுவில்,   அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது.  அவருக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.   இதுகுறித்து தலைமை நீதிபதி அளித்துள்ள பதிலில்,   அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலனை செய்தும்,  சம்பந்தப்பட்ட தனி நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.  வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.