விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது . ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. இன்று பள்ளி முன்பாக அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசியதோடு, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். அதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகள் அனைத்திற்கும் தீ வைத்துக் கொளுத்தினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்திருந்த போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற, டிஐஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் பள்ளி மீது தவறு இருப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவித்த நிலையில், விசாரணை நடத்த மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஆணை பிறப்பித்துள்ளது . மேலும் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கு, நாளை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை வர இருக்கிறது. மரணத்தில் சந்தேகம் உள்ளதால் தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என மாணவி தந்தை ராமலிங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரம் பிரேத பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்றும், முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையைகாவல் துறை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.