ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? நாளை மீண்டும் ஆலோசனை: தினேஷ் குண்டுராவ்

 
Dinesh Gundu Rao

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது.


தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று இரவு நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர் அசன்மவுலானா மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது‌. இதையடுத்து வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். 

Image

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் இறுதி செய்து பெயர் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலோசனைக் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், “அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தலின் பேரின் இன்று சென்னை வந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்தேன். நாளை மீண்டும் ஆலோசனை மூத்த தலைவர்கள் உடன் நடைபெற இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை வேட்பாளர் தேர்வை இறுதி செய்து அறிவிக்கும். மீண்டும் அந்த தொகுதியை காங்கிரஸ்க்கு தந்த திமுக தலைவர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி” என தெரிவித்தார்.