சதுரகிரி மலைக்கோயிலுக்குச் சென்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு..

 
இறப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர்  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாட்கள் மட்டுமே  பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில்  4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்டு இருக்கும். அத்துடன் மலையடிவாரத்தில் உள்ள ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று மலையேறி கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆகையால் மோசமான வானிலை காலங்களில் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை..  

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

இங்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இந்நிலையில்,  தை அமாவாசையை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டது.  தை அமாவாசை தினமான இன்று சதுரகிரி மலையில் உள்ள சுந்தரலிங்கம் சுவாமிக்கும், சந்தன மகாலிங்கம் சுவாமிக்கும் பால், தயில், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதணைகளும் நடைபெற்றன. இன்று ஞாயிறு விடுமுறை என்பதாலும், தை அமாவாசை என்பதாலும் பக்தர்கள் கூட்டம்  அலைமோதியது.  இன்று பிற்பகல் வரை பக்தர்கள் மலையேர அனுமதிக்கப்பட்ட நிலையில்,  இன்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி மலை

மேலும், மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் சதுரகிரி மலையில் தங்கவும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில்  இன்று காலை சதுரகிரி மலையேறிய கோவை கே.கே.புதூர் சாய்பாபா நகரைச் சேர்ந்த சிவக்குமார் (48) என்ற பக்தர் திடீரென உயிரிழந்தார்.  சதுரகிரி மலையில் இரட்டை லிங்கம் அருகே உள்ள வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு  மயங்கி விழுந்த  சிவக்குமார் மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்தார்.  கோவில் பகுதியில் இருந்த வனத்துறையினர்,  உடனடியாக சிவக்குமாரின் உடலை  அடிவாரத்துக்கு கொண்டு வந்து  பின்னர், ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து, சாப்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.