தேவர் ஜெயந்தி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்த்தூவி மரியாதை...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு , தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. தேவர் ஜெயந்தியை ஒட்டி தமிழகம் முழுவதும், அரசியல் தலைவர்கள் பலரும் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறுத்து ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.” என்றும் ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.