குரூப் 4 தேர்வு - தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு.. பொங்கிய தேர்வர்கள்..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பல தேர்வு மையங்களில் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, சாலைமறியலில் ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடந்து முடிந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெற்ற தேர்வினை எழுத 22 லட்சத்து 02 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாகவே டிஎன்பிஎஸ்டி வெளியிட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளில் , காலை 8.30 மணிக்குள்ளாகத் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பல இடங்களில் தாமதமாக வந்த தேர்வர்களை அதிகாரிகள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை.. இதனால் தமிழகம் முழுவது பல்வேறு தேர்வு மையங்களில் களேபரங்கள் நடந்தன.
அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 9.05 மணிக்கு தேர்வு எழுத வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால், தேர்வர்கள் போலீசாருடன் வாக்குவாதம் ஈடுபட்டதுடன் பள்ளி கேட்டை தள்ளி உள்ளே செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி உள்ள தனியார் பள்ளியில் 8:40 மணிக்கு வந்த 20 மேற்பட்டோரை தேர்வு அதிகாரிகள் ஒரு மணி நேரமாக வெளியே நிற்க வைத்துள்ளனர். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் பெண் ஒருவர் காலதாமதமாக வந்ததால், அவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஹால்டிக்கெட்டை பள்ளி நுழைவு வாயிலேயே கிழித்தெறிந்து சென்றார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில், காலதாமதமாக வந்த 40க்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வட வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஏராளமான தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அறிவுறுத்தியதன் பேரில் அவர்கள், கண்ணீருடன் கலைந்து சென்றனர். சென்னை புதுக் கல்லூரியில் கால தாமதமாக வந்ததாக தேர்வறைக்குள் அனுமதிக்கவில்லை என கூறி தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.