மின் இணைப்பு எண்ணுடன் - ஆதாரை இணைக்க காலக்கெடு..

 
மின் இணைப்பு எண்ணுடன் - ஆதாரை இணைக்க காலக்கெடு..

மின் கட்டணம் செலுத்த  ஆதார் எண்ணை வரும் ஜனவரிக்குள் இணைக்க வேண்டும் என மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம்  3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன.  அதன்படி   2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. பயனர்கள்  நேரடியாக மின்வாரிய அலுவலகங்களுக்குச் சென்றோ, அல்லது மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலமாகவோ  மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக  நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

eb bill

அதாவது, தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம்  தெரிவித்துள்ளது.  மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை காலக்கெடு நிர்ணயிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஜனவரிக்குள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதலே,  மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்கிற அறிவிப்பு காட்டப்பட்டு வருகிறது.  இதனால், மின் நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல்  சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.