திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கம்- துரைமுருகன்

 
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  “இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக்கொடுத்த எங்க முப்பாட்டன் டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என ஆளுநர் கூறினால் அவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நீ போடா காஷ்மீருக்கு நாங்களே தீவிரவாதிகளை அனுப்புறோம். அவன் உன்னை சுட்டுக்கொல்லட்டும். அவர் கவர்னர் என்றாலும் அவரை பேரவையில் ஓடவிட்டவர் மு.க.ஸ்டாலின்” எனக் கூறினார். 

இது தொடர்பான வீடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி போலீசில் புகார் அளித்திருந்தார். 

இந்நிலையில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.