மத்திய அரசைக் கண்டித்து ஜன.24ல் போராட்டம் - திமுக கூட்டணி அறிவிப்பு..

 
மத்திய  அரசைக் கண்டித்து ஜன.24ல் போராட்டம் -  திமுக கூட்டணி அறிவிப்பு.. 

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் செய்வதாக மத்திய அரசை கண்டித்து,  திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் வரும் 24-ம் தேதி மதுரையில் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2015 பிப்ரவரியில்  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்பின்னர்  தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார்.  ஆனால் அடிக்கல் நாட்டப்படு 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில்  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய பாஜக அரசு காலம் தாழ்த்தி வருவதாக திமுக  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

மதுரை எய்ம்ஸ் :

இதனையடுத்து மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.  இதுகுறித்து மதுரை மாநகர் திமுக செயலாளர் கோ. தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. இதைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே வரும் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது. இதில், மதுரை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். திமுக கூட்டணி கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.