திமுக முப்பெரும் விழா: நிர்வாகிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார் .
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் திமுக முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டம்புதூரில் விழாவுக்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி , KKSSR ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.
இதில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருது மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியையும் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர். பள்ளி நாட்கள் தொடங்கி திமுகவில் இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. இரா.மோகன் உடல்நலம் குன்றி வீட்டில் இருப்பதால் அவர் சார்பாக அவரது மகன் விருதை பெற்றுக்கொண்டார். மேலும் திமுக பொருளாளர் டிஆர் பாலுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் 19 வயதிலேயே தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு பல பணிகளை மேற்கொண்ட குன்னூர் ஆ. சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. மேலும் சி.பி. திருநாவுக்கரசு பாவேந்தர் விருதை பெற்றார்.