திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: சகோதரர் கைது! பகீர் புகார்

 
masthon

முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மஸ்தானின் தம்பி மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

masthan


சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த முன்னாள் ராஜ்யசபா எம்பி மஸ்தான், கடந்த மாதம் 22 ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு பின்பு நெஞ்சு வலியால் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் நடத்திய விசாரணையில் முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மஸ்தானுடன் காரில் பயணம் செய்த அவர் தம்பி மருமகன் இம்ரான் மற்றும் ஐந்து பேர் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மஸ்தானின் உடன் பிறந்த தம்பி, ஆசம் பாஷாவை கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்தனர். தனது கணவர் மற்றும் மருமகன் உள்ளிட்டோரை பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசார் கைது செய்துள்ளதாக மஸ்தானின் தம்பி மனைவி ஜூனத் பேகம் டிஜிபியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், “எனது கணவர் ஆசம்பாஷா பெரியபாளையத்தில் எஸ்.எஸ்.கிளினிக் ஆசம் மருத்துவமனை வைத்து மேற்பார்வையாளராக இருக்கிறார். எனது மகள் ஷாஹீனாவை இம்ரான் பாஷா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளேன். எனது கணவர் ஆசம் பாஷாவின் மூத்த சகோதரர் தான் முன்னாள் எம்.பி மஸ்தான் ஆவார்.

murder

சமீபத்தில் மஸ்தான் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வந்தது. மஸ்தானின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள  தமிழக முதல்வர் வந்திருந்த போது மஸ்தானின் மனைவி மற்றும் மகன் முதல்வரிடம் எனது கணவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் . எனது கணவரின் தம்பி ஆசம் பாஷா மற்றும் அவரது மருமகன் இம்ரான் தான் இந்த கொலையை செய்தனர் எனக் கூறினார். மஸ்தான் மற்றும் குடும்பத்தார் முதல்வரிடம் சொன்ன குற்றச்சாட்டு அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்துறை எனது மருமகன் இம்ரான் தமீம், நசீர், தலகீத் அஹ்மத் லோகேஷ்வரன் ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

எனது மருமகன் இம்ரான் 15 லட்சம் ரூபாய் முன்னாள் எம் பி மஸ்தானிடம் இருந்து கடனாக வாங்கி இருந்தார். அந்த பணத்தை மஸ்தான் திரும்பி கேட்டதால் தனது நண்பர்களை வைத்து கொலை செய்தனர் என தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று 12-01-2023 எனது கணவர் ஆசம் பாஷாவை கூடுவாஞ்சேரி காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று தனது சகோதரர் மஸ்தானை மருமகன் இம்ரானை வைத்து சொத்துக்காக கொலை செய்ததாக குற்றச்சாட்டு கூறி கைது செய்துள்ளனர். ஏற்கனவே மருமகன் இம்ரான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் சூழ்நிலையில்,  எனது கணவர் ஆசம் பாஷாவையும் கைது செய்துள்ளனர்.


மரணம் அடைந்த முன்னாள் எம் பி மஸ்தான்க்கும், எனது கணவர் ஆசம் பாஷாவுக்கும் எந்த நேரத்திலும் கருத்து வேறுபாடு எதுவும் இருந்ததில்லை. அவரது மரணத்திற்குப் மஸ்தான் குடும்பத்தினர் தேவையில்லாமல் எனது கணவர் ஆசம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை சம்பந்தப்படுத்தி புகார் கொடுத்து, அதன்படியே காவல்துறை நடந்து கொள்வதாக நான் நினைக்கிறேன். எனவே இந்த வழக்கை உடனே சிபிசிஐடி புலனாய்வு துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் . எனது கணவர் ஆசம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என  வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.