ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்குக- விஜயகாந்த்

 
vijayakanth

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

vijayakanth

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மிக குறைவான பென்சனையே அவர்கள் பெற்று வருகின்றனர்.

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களை தவிர, மற்ற அனைத்து அரசு தரப்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை 100 நாட்களுக்குள் வழங்கிவிடுவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, ஆட்சியமைத்து 600 நாட்களை கடந்தும் மேற்கண்ட வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 88 ஆயிரம் பேர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

vijayakanth

மேலும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் ஏங்கியே விண்ணுலகம் சென்று விட்டனர். மேலும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீடு, அதாவது முதல்வர் காப்பீடு திட்டம் கூட இல்லாமல் குறைவான பென்சனில் பொருளாதார வசதியின்றி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கடுமையான நோயுடன் போராடி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதோடு, நீதிமன்றம் வரை சென்றும் தற்போதைய திமுக அரசு செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தேர்தல் வாக்குறுதியில், வெற்றி பெற்றவுடன் 100 நாளில் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்த திமுக அரசு, இதுவரை அதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் திமுக அரசு காலம் தாழ்த்தாமல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.