அந்த 2 நாள் மிகச்சிறப்பு.. காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு..
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தபோது, தங்குதடையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 28ஆம் தேதி மாலை பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரது வருகையை ஒட்டி சென்னையில் ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை மற்றும் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மாமல்லபுரம் பகுதிகளில் மட்டும் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சென்னை விமான நிலையம், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கம், அடையாறு ஐ.என்.எஸ் தளம் ஆகிய இடங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிபால் தலைமையில் 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள், 24 காவல் துணை ஆணையர்கள் உள்பட மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் மட்டும் 6000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . சாலை மார்க்கமாக சென்னை மாநகரக்குள் பிரதமர் மோடி செல்லும் வழி தடங்களில் 50 மீட்டர் இடைவெளி விட்டு போலீசார் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல உயரமான கட்டிடங்கள், உயர் கோபுரங்கள் ஆகியவற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் நிறுத்தப்பட்டு இருந்தனர்..
இதனை அடுத்து பிரதமர் மோடியின் சென்னை சுற்றுப்பயணத்தின் போது சிறப்பான பாதுகாப்பு வழங்கிய காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் இதுகுறித்து காவல் துறையினர் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் அவர் அனுப்பியுள்ள செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சென்னையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, தங்குதடையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்படுத்திய விதம் மிகவும் பாராட்டுக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்