சிறப்பா செஞ்சு முடிச்சிட்டீங்க.. காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு..

 
Sylendra babu

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணியை சிறப்பாக முடித்த  காவல்துறையினருக்கு தமிழக  காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த 30.10.2022 அன்று நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. தாமரைக் கண்ணன், மேற்பார்வையில் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. ஆஸ்ரா கர்க், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில்குமார்,  தலைமையில் இராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. மயில்வாகனன், 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10.000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.

தேவர் சிலை

உங்களது இந்தச் சாதனையின் மூலம் நமது தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள். பாதுகாப்புப் பணியில் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கடமையாற்ற வாழ்த்துகிறேன்.” என்று பாராட்டியுள்ளார்.