திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை அருகே திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை நெமிலி தாலுக்கா கீழ் வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று விழாவில் மயிலார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் தொங்கியவாறு அம்மனுக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில், கிரேனில் ஒரே நேரத்தில் 8க்கும் மேற்பட்ட பக்தர்கள் தொங்கியபடி சென்றனர். அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனை பள்ளமான இடத்தில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்பாராதவிதமாக கிரேன் திடீரென சாய்ந்து கூட்டத்தில் இருந்தவர்களின் மீது விழுந்தது. இதில் அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனில் தொங்கியபடி சென்ற கீழ்ஆவதும் பகுதியை சேர்ந்த ஜோதிபாபு , கூட்டத்தில் நின்றிருந்த முத்துக்குமார் , பூபாலன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன் எட்டுக்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.