சென்னையில் இன்று 200 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

 
corona vaccine

சென்னையில் இன்று 35 ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னையில் நடைபெற்ற 34 தடுப்பூசி முகாம்களில், 41,90,373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

vaccine

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் 4-ந் தேதி இன்று 35வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 42,70,342 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,54,588 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வருகின்ற 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.