ரேசன் கடையில் ரூ.1000 ரொக்கமாக வழங்குவதில் எந்த சிக்கலும் வராது - ராதாகிருஷ்ணன் பேட்டி

 
radhakrishnan

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்குவதில் எந்த சிக்கலும் வராது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா  ஆயிரம் ரொக்கம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதற்காக ரூபாய் 2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் 8ம் தேதி வரை நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். 

இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை நேரடியாக வழங்குவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்குவதில் எந்த சிக்கலும் வராது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நேரடியாக வழங்குவதில் எந்த சிக்கலும் எழாது. பயோமெட்ரிக் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் ரூ.1,000 கொடுக்கப்படும்  என்பதால் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினார்.