தொடரும் கனமழை : நாளை நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு.. மறுதேர்வு எப்போ??
கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டு தட்டச்சு தேர்வு நாளையும் , நாளை மறுநாளும் ( நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் ) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தட்டச்சு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதால் வட தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், குறிப்பாக 15ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக, தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஆகையால் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார்.