இதில் காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை.. திமுகவுக்கு வேறு கருத்து இருக்கலாம் - கே. எஸ்.அழகிரி..

 
  கே.எஸ் அழகிரி

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.  அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் என்றும்,  அவர்கள் நிரபராதிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.  ஆனால் அவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது;  கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.  

கே.எஸ்.அழகிரி

 மேலும்,  தமிழர்கள் என்றால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தமிழர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும்  விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லலாமா?  என்றும் கேள்வியெழுப்பினார்.  கோவை குண்டுவெடிப்பில் கைதான இஸ்லாமியர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள் என்று கூறிய அவர்,  எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளை கொண்டாடக்கூடாது என்றார்.   இந்த விவகாரத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் ஒரே கருத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் அவர் தெளிவிபடுத்தினார்.  அவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம் என்றும்,  மதசார்பின்மை என்பதில் நாங்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம் என்றும்  கூறினார்.