எதிர்க்கட்சிகளின் பிளவு இடைத்தேர்தலில் எங்களுக்கு சாதகமாக அமையும்- திருநாவுகரசர் எம்.பி. பேட்டி

 
Thirunavukarasar

எதிர்க்கட்சிகளின் பிரிவு எங்களுக்கு சாதகமாக உள்ளதால் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெறுவார் என திருநாவுகரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுகரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இருந்ததை விட தற்போது உள்ள இடைத்தேர்தலில் நல்ல சாதகமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க.வின் இந்த 1½ ஆண்டுகால ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆட்சியில் ஏராளமான பணிகள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் இளங்கோவன் குடும்பத்தினருக்கு அனுதாபமும் உள்ளது. 

thirunavukarasar

அ.தி.மு.க. பல கூறுகளாக உடைந்து கிடக்கிறது. யார் போட்டியிடுவார்கள் என்பதை கூட அ.தி.மு.க.வினரால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களுக்கு சின்னம் கிடைக்குமா?, கிடைக்காதா?, யார் போட்டியிடுவார் என்ற குழப்பமான சூழல் உள்ளது. பா.ஜனதா போட்டியிடுமா? என்ற குழப்பமும் உள்ளது. இவையெல்லாம் எங்களுக்கு சாதகமாக உள்ளதால் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெறுவார். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதை மோடி, அமித்ஷா தான் முடிவு செய்வார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நான் மீண்டும் வருவேனா என என்னால் கூற முடியாது. கட்சி தலைமை யாரை தலைவராக அறிவிக்கிறதோ நாங்கள் அவருடன் இணைந்து செயல்படுவோம். ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் காங்கிரஸ் பலம் பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.