காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சருடன் சந்திப்பு

 
EVKS and Stalin

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  

இந்த தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில், அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலுக்கு பிரச்சரத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக்கொண்டதாக கூறினார். முதலமைச்சர் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுகு வெற்றியை தேடி தரும் எனவும் கூறினார்.