"என் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணம் பினராயி விஜயன் தான்" - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

 
tn

காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உள்ளனர் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் பின்வருமாறு:-

tn

கேள்வி: கேரள மக்கள் தமிழ் சினிமா மற்றும் இசையின் பெரும் ரசிகர்கள். அதே போல ரசிகர் கூட்டம் தமிழக முதல்வருக்கும் அங்கு இருக்கிறது. கண்ணூரில் நடந்த சிபிஎம் கட்சி மாநாட்டில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்பில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழகம் எப்படிப் பார்க்கிறது?

முதலமைச்சர் பதில்: எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல 'காம்ரேட்' பினராயி விஜயன் அவர்களுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டு இருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்கு தெரியும். அப்போது கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போல ஒரு முதலமைச்சர் நமது மாநிலத்திற்கு இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதை ஊடகங்கள்கூட எழுதியது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தபோது - உள்ளபடியே சொல்கிறேன். என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதரானமாக உங்களுடைய முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளை தான் நான் கையில் எடுத்தேன். குறிப்பாக, கொரோனா தொற்று நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மாநிலத்தினுடைய முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் வழிகாட்டுதல்படி தான் அந்தப் பணியை நிறைவேற்றினேன் என்பது முக்கியம். இதுதான் எனக்கு ஒரு பெரிய பெருமை. 

tn

கேள்வி: தமிழகத்தில் சிபிஎம் கட்சியும் மற்றும் திமுகவும் கூட்டணி கட்சிகள். இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது? 

 முதலமைச்சர்  பதில்: எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, இலட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாவே இருக்கிறோம்.திமுக ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம்- யை பொறுத்தவரையும் அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இப்பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது, இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம். அதையும் தாண்டி பல கருத்துகளை சிபிஎம் அதிகாரபூர்வமான பத்திரிகையான “தீக்கதிர்” பத்திரிகையில், அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள் அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும். 

கேள்வி: உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறியபோது, தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பின்னர் பிரதமர் மோடி பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை ஏற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஒரு மொழி என்று பேசுவது மாநில மொழிகளுக்கு அச்சுறுத்தலானதா? 

 முதலமைச்சர் பதில்: ஆமாம்!  இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழக்கூடிய நாடாகும். ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசு மொழியாகவோ நிச்சயம் ஆக முடியாது. அப்படி ஆனால் மற்ற மொழிகள் பாதிக்கப்படும். காலப்போக்கில் அழிந்துவிடும். அதில் மாற்று கருத்து இல்லை. அதுதான் என்னுடைய பதில், 

கேள்வி: கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகி வருகிறது. பத்திரிக்கையாளர்கள் கூட கைது செய்யப்படுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கிறது. போராடிப் பெற்ற சுதந்திரத்தை இழக்கிறோமா? 

முதலமைச்சர்  பதில்: இவை அனைத்தும் ஒரு எதேச்சதிகாரப் போக்குகள்! போராடி பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகள் அனைத்தையும் பறிப்பது என்பது மிகமிக தவறானது. இந்திய விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செய்யக்கூடிய துரோகம் என்பது தான் என்னுடைய கருத்து. நன்றி, வணக்கம்.