நாகை, திருவாரூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை
தொடர் தொடர் கனமழையின் காரணமாக எட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவு வரும் நாலாம் தேதி வரைக்கும் நீடிக்கும் என்றும், இன்று முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் , வடதமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கனமழையின் எச்சரிக்கையினால் சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.