லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. 13 மாணவிகள் காயம்,,
கரூரில் முன்னால் சென்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 மாணவிகள் காயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எல்லையம்பாளையத்தில் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில், கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் மகேஷ் என்பவர் கல்லூரி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது பேருந்து வெண்ணைமலை நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் பாம்பு ஒன்று கடந்து செல்வதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென நடு ரோட்டில் நின்று விட்டார். இதனையடுத்து பின்னால் வந்த லாரியும் திடீரென திடீர் பிரேக் பிடித்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால் லாரியை பின்தொடர்ந்து வந்த தனியார் பெண்கள் கல்லூரி பேருந்து, முன்னால் நின்ற லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அத்துடன் பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் முன் இருக்கை, கம்பிகளில் பலமாக மோதியதில் 13 மாணவிகள் காயமடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வெங்கமேடு காவல் நிலைய காவல்துறையினரும், பொதுமக்களும் மாணவிகளை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் மகேஷ், மது பழக்கம் உடையவர் என்றும் இதேபோல் ஏற்கனவே அடிக்கடி விபத்தை ஏற்படுத்தியதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஓட்டுநரிடம் மாணவிகள் கேட்டால் ‘விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறு, இல்லை என்றால் கீழே இறங்கு’ என மிரட்டுவதாகவும் மாணவிகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.