கோவை கார் சிலிண்டர் விபத்து : என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு..
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் காவல் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனையில் ஈடுபட்டார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தநிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
கடந்த 23-ம் தேதி கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் சிலிண்டர் வெடித்து ஜபேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாநகர காவல் ஆய்வாளர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 12 மணி நேரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் , நேற்று இரவு மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்குகளை விசாரிக்க என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கு விசாரணை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தான், தற்போது முழுமையாக என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிக்கும் எனவும், இதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது என்.ஐ.ஏ விசாரணையானது தொடங்கியிருக்கிறது. மேலும் இதுவரை நடந்த விசாரணையை தற்போது வரை நடந்து கொண்டு வருகின்றது. 10 இடங்களில் போலீசார் சோதனையை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில் தொடர்ந்து வழக்கு விசாரணையானது தீவிரமடைந்து வருகின்றது.