பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

 
clash

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மாவட்ட தலைவர் அருள் முன்னிலையில் பாஜகவினர் நாற்காலிகள் வீசி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் பாஜக சக்தி கேந்திரா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட தலைவர் அருளின் ஆதரவாளரான சங்கராபுரம் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தரப்பினருக்கும், முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஆரூர் ரவி தரப்பினருக்கும் இடையே மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


பின்பு இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து அடித்துக் கொண்டும் அருகில் இருந்த நாற்காலிகளை எடுத்து சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டம் நடைபெற்ற அந்த தனியார் கூட்ட அரங்கம் போர்க்களம் போல் காணப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்து முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர்கள் வெளியேறிய நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சங்கராபுரம் அருகே பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த இரு தரப்பினர் கோஷ்டி மோதல் தொடர்பாக ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.