அன்புச்செழியன் தொடர்புடையவர் வீட்டில் ரூ.13 கோடி ரொக்கம் சிக்கியது!!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடையவர் வீட்டில் ரூ. 13 கோடி ரொக்கம் சிக்கியது.
மதுரையை சேர்ந்த அன்பு செழியன் சினிமா பைனான்சியராக உள்ள நிலையில் கோபுரம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களையும் தயாரித்து வருகிறார். அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். 40ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலிட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய் ,பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தியது. அப்போது 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடையவர் வீட்டில் ரூபாய் 13 கோடி ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள அன்பு செழியனுக்கு தொடர்புடையவர் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சினிமா தயாரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கம் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வருமானவரித்துறையின் முழுமையான அறிக்கை வெளியான பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.