"உங்கள் துறையில் முதல்வர்" திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்கள் பெற்றார் முதல்வர்

 
tn

காவலர்களின் குறைகளை களைந்திட "உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்களிடம்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.9.2022) சென்னை , காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் “உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

tn

மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிவரும் காவல்துறையினரின் நலன் காத்திட - காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம்நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கியது, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையினை 60 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்புப் படியாக மாதம் ரூ.300/- வழங்கியது, 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குதல், காவல் ஆளிநர்கள் விடுப்பு எடுக்க வசதியாக சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட “(CLAPP) விடுப்பு செயலி" வெளியீடு, காவலர்களுக்கான இடர்படியை ரூ.1000/- ஆக உயர்த்தியது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

tn

அந்த வகையில், காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார். முன்னதாக, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.