தொடர் கனமழை - 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!!
14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் ஆபத்து நிறைந்த பகுதிகளில் நின்று வேடிக்கை பார்க்கவும் ,செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.