மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..
எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்வதற்காக பணிகளை அமைச்சர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தலைமைச் செயலக நிகழ்வுகள் முடிந்த பின்பாக இல்லம் செல்லக்கூடிய வழியில், எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ராமச்சந்திரன், துரைமுருகன் எ.வ.வேலு ஆகியோரும் ஆய்வில் பங்கேற்று உள்ளனர்.
மீட்பு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது, சென்னை மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் மழையை எதிர்கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை என்ன என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம், திறந்து விடப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்படும் மக்களே தங்க வைப்பதற்காக 5,000 மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை எத்தனை பேர் மீட்கப்பட்டு அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; மீட்பு பணியில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், மழை வெள்ள பாதிப்பு குறித்து இதுவரை அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு எத்தனை அழைப்புகள் பொதுமக்களிடம் வந்துள்ளன; அவற்றில் எத்தனை அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது; எந்த மாதிரியான கோரிக்கைகள் மக்களிடமிருந்து வந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதுதொடர்பாக அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்..