சென்னையில் தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
சென்னை தரமணி டைடல் பார்க்கில் தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 -வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை சார்பில் இன்று சென்னை தரமணியில், தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். முன்பாக தொழில் வளர்ச்சி மாநாட்டின் அரங்குக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ட்ரோன்கள் கண்காட்சி அரங்கை பார்வையிட்ட முதலமைச்சர், அது குறித்த சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தார். தொழில் வளர்ச்சி மாநாட்டில் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றுதற்கு பின்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சுமார் 8 லட்சத்து 2000 கோடி அளவிலான முதலீடுகள் இதுவரை தமிழகத்தில் பெறப்பட்டிருக்கின்றன. மேலும், 3 லட்சத்து 2,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறக்கூடிய 4.0 மாநாட்டில் 15க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இதன் மூலமாக வரும் காலங்களில் அதிக அளவில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக தொழில் நிறுவனங்க்ளின் சிறப்பு மையங்களை திறந்து வைத்த முதலமைச்சர், தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2022 வெளியிட இருக்கிறார். தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம் மற்றும் விமான பயிற்சி நிறுவனத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த 15 ஒப்பந்தங்கள் மூலம் 10, 000 பேருக்கு வேலைவய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதன்மை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்