மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் 3ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழா தொடங்கியுள்ளது. இதனையொட்டி பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த விழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தற்போது பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் 3ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.