சென்னை பள்ளிகளில் சிற்பி திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
stalin

சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் 'சிற்பி' என்னும் புதிய திட்டத்தை தமிழக அரசு  அறிமுகம் செய்ய உள்ளது.

மாணவர்கள்

சென்னையில் பெருகி வரும் செயின் பறிப்பு, செல்ஃபோன் பறிப்பு, வாகன திருட்டு போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.  இந்தக் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறையும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒருபகுதியாக சிறார்களை நல்வழிப்படுத்த  புதிய திட்டம் ஒன்றை  செயல்படுத்த  காவல்துறை திட்டமிட்டுள்ளது.  அதாவது சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணும் வகையிலும்,  பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி நன்னெறிப்படுத்தவும்  சென்னையில் 'சிற்பி' திட்டத்தை தமிழக அரசு  செயல்படுத்துகிறது.  

‘கலைவாணர் அரங்கில்’..செப்டம்பர் 14 ஆம் தேதி சிற்பி தொடக்க விழா

இந்த திட்டத்தினை  சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொடங்கி வைக்கிறார்.  முதல்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம்  அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.  ஏற்கனவே பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல்,   காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த சிற்பி  திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக  8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து சிற்பி படை உருவாக்கப்பட்டு , அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.