செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பட்டு வேட்டி, சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..
செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் பங்கேற்றுள்ளார்.
உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் தொடக்க விழாவில் இன்று மாலை 6 மணிக்கு, பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதும் போட்டியில் பங்கேற்கும் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குநர் விக்னேஷ் சிவன், கவிஞர் வைரமுத்து, முதலமைச்சர் ஸ்டாலினி மனைவி துர்கா ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்., தமிழக அமைச்சர்கள், தமிழக எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டுவேட்டி பட்டுச் சட்டையில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக முதல்வரை வேட்டி சட்டையில்தான் அதிகம் பார்க்க முடியும் இருந்தபோதிலும் , இன்று அவர் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் பங்கேற்றிருக்கிறார்.