செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுப் பரிசு..
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசுகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 10 வரை 11 சுற்றுகளாக போட்டி நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் ஒலிம்பியாட் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் 187 நாடுகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையெல்லாம் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். அதேபோல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த போட்டியில் 6 அணிகளில் 30 வீரர்களுடன் இந்திய அணி களமிறக்குகிறது.
இத்தகைய சிறப்புமிக்க போட்டி இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறுவது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா கடந்த 29 ஆம் தேதி ( நேற்று முன் தினம் ) நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி , தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு மாமல்லபுரம் மர சிற்பத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது திருவள்ளுவர் சிலையையும், விமான நிலையத்தில் வழியனுப்பிய போது மரத்தால் ஆன சதுரங்க பலகையையும் வழங்கினார். இந்நிலையில் தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசுகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மாமல்லபுரம் சிற்பமும், தமிழக அரசால் செஸ் ஒலிம்பியாட் லோகோவாக வடிவமைக்கப்பட்டுள்ள தம்பி சிலையும் நினைவுப் பரிசாக வழங்கப்படவுள்ளது.