செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படங்கள் இடம்பெற வேண்டும்- ஐகோர்ட்

 
modi

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்- உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

BJP glues PM's pic to Chess Olympiad poster, activist detained for spray  painting it | The News Minute

சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. ஆனால் ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, " 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தமிழக அரசு தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த காரணத்தால் குடியரசுத் தலைவர் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தவில்லை. பிரதமர் விழாவைத் தொடங்கி வைப்பது 22ஆம் தேதியே உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய நாளிதழ்களில் அவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு இதில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே  சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இல்லை என தெரிய வருகிறது. ஆகவே பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பில் தமிழக அரசு பொதுமக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்தால் அவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என கேட்கப்பட்டது. பொது மக்களின் உணர்வுகளை மதிப்பதும், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத் தருவதும் ஒருங்கிணைப்பாளர்களில் சிறந்த மன்னிப்பா அமையும். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்