செஸ் ஒலிம்பியாட் : நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து பங்கேற்பு..
கோலகலமாக தொடங்கி நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. இதற்கான தொடக்கவிழா தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னை முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் தொடக்க விழாவில் இன்று மாலை 6 மணிக்கு, பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது போட்டியில் பங்கேற்கும் 187 வெவ்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள், அதிகாரிக்கள் உள்பட திரைப்பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பங்கேற்றுள்ளார். இதேபோல் கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.