பெண்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களில் சென்னை முதலிடம்..
இந்தியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கான மிகச் சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் சமூகம், பாதுகாப்பு மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய அளவுருக்களின் அடிப்படையில் பெண்களுக்கு உகந்த சூழல்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. பெண்கள் பாதுகாப்பில், தேசிய தலைநகரான டெல்லி, சென்னையை விட 30 புள்ளிகள் குறைவாக பெற்று 14வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல் 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில், நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக திருச்சி மாவட்டம் தேர்வாகியிருக்கிறது. இதில் அடுத்தடுத்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் பட்டியலில் உள்ள 2 பிரிவுகளிலும் முழுமையான வளர்ச்சியின் அடையாளமாக தமிழ்நாட்டில் உள்ள 8 நகரங்கள் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குற்ற பதிவுகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஆதாரங்களின் தரவுகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.