சென்னை மழையில் மூழ்கிய பேருந்து - ரப்பர் படகுகள் மூலம் பயணிகள் மீட்பு
சென்னையில் பெய்த மழை ஆறு போல் ஓடியதால் பேருந்து மூழ்கியது. பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை கயிறு மற்றும் ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
சென்னையில் வியாசர்பாடி பகுதியில் இருக்கும் ரயில்வே சுரங்கப்பாதை மழை பெய்யும் போதெல்லாம் அந்த இடம் ஒரு ஆறு போல் காட்சி அளிக்கும். பேருந்துகள் சென்றால் அதில் மூழ்கி விடும். பேருந்துக்கே அந்த நிலைமை என்றால் இரு சக்கர வாகனங்கள் எதுவும் அந்த வழியாக பயணிக்க முடியாது.
மழை அந்த பகுதியில் எப்பொழுது எல்லாம் பெய்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த நிலைமை ஏற்படுகிறது. அப்படித்தான் தற்போதும் பெய்த ஒருநாள் வட கிழக்கு பருவமழையில் வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதை ஆறு போல் மாறிவிட்டது. அந்த சுரங்கப்பாதை வழியாக சென்னை பிராட்வேயில் இருந்து மூலக்கடை நோக்கிச் சென்ற அரசு பேருந்து அந்த சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது.
பேருந்தின் முக்கால்வாசி பகுதி மூழ்கி விட்டதால் பேருந்தால் நகர முடியவில்லை. பயணிகளும் பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர் . தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேருந்துக்குள் சிக்கிய 25 பயணிகளை கயிறு மற்றும் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து மிதமான மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர் ,ஆவடி ,அயப்பாக்கம்,அண்ணனூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இன்றைக்கும் இந்த மலை நீடித்தது. இதனால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த ஒருநாள் மழைக்கே சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதை ஆறு போல் மாறியதால், பேருந்து மூழ்கியது அப்பகுதியில் சிறுது நேரம் பெறும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.