குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை அறிமுகம் - சென்னை மாநகராட்சி..

 
chennai corporation

கொடுங்கையூரில் கொட்டப்பட்ட குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 100 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்த திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை பிரித்தெடுக்க ரூ.354 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை அறிமுகம் - சென்னை மாநகராட்சி..

இந்த பணிகள் டிசம்பர் 2023-க்குள் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வரும் திடக்கழிவுகள் பயோ-மைனிங் முறையில் பிரிக்கப்பட்டு நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ.641 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்பு குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் 2 ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.