கனியாமூர் பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Kaniamoor

கனியாமூர் தனியார் பள்ளியில்  9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

high court


 
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன்; சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்தார். இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று பள்ளிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தீர்ப்பளித்தார். மேலும் பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ.21க்கு ஒத்திவைத்தார்.