இனி செல்லப் பிராணிகளுக்கு இலவச சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

 
இனி செல்லப் பிராணிகளுக்கு இலவச சிகிச்சை  - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

சென்னை மாநகராட்சி சார்பில் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை வழங்க நான்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான ஆர்வம் பொது மக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டு வருகிறது. பொதுவாக பாதுகாப்பிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அக்கறையுடன் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுது அவற்றிற்கு  இலவச சிகிச்சை வழங்குவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறை கால்நடை மருத்துவப்பிரிவின்  சார்பில் நான்கு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் கீழ்க்கண்ட நான்கு இடங்களில் செயல்பட்டு வருகின்றது.

சென்னை மாநகராட்சி

* திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பல்லவன் சாலை திரு.வி.க. நகர், சென்னை -11 கோட்டம் - 68, மண்டலம் - 6.     

* நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பள்ளி தெரு, நுங்கம்பாக்கம்,  சென்னை - 600 034. கோட்டம் - 110,  மண்டலம் -9.
    
* கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்,  முத்துரங்கன் சாலை, கண்ணம்மாப்பேட்டை, சென்னை - 600 017, கோட்டம் - 141, மண்டலம் -10     

* மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், நேரு நெடுஞ்சாலை, மீனம்பாக்கம், சென்னை, கோட்டம் - 166,   மண்டலம் -12.
     

இனி செல்லப் பிராணிகளுக்கு இலவச சிகிச்சை  - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
இம்மையங்களில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக  சிகிச்சை வழங்கப்படுவதுடன், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க  கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2021-2022 நிதி ஆண்டில் இம்மையங்களில் 21,020 எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெறிநாய்க்கடி நோய்  இல்லா சென்னை (Rabies free Chennai) என்ற இலக்கினை அடையும் பொருட்டு இம்மையங்களில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது .

பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின்படி செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம்  (Pet Licence) பெற்றிருக்க வேண்டும். இதற்கென இம்மையங்களில் செல்ல பிராணிகளுக்கான உரிமம் ரூ.50/- கட்டணத்தில் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகின்றது.  தினசரி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து) இயங்கும் இந்த கால்நடை மருத்துவ சிகிச்சை மையங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு  பொதுமக்ககளை கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.