போகி நாளில் பொருட்களை எரிக்கக் கூடாது - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

 
சென்னை மாநகராட்சி

போகிப் பண்டிகை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து தூய்மை பணியாளர்களிடன் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

‘பழையன கழிதலும்.., புதியன புகுதலும்’என்கிற பழமொழிக்கு ஏற்ப போகிப்பண்டிகையின் போது  பழைய பொருட்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. ஏற்கனவே வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது.  ஆகையால் போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மாறாக  மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

போகி பண்டிகை

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது, “போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube) மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போகி நாளில் பொருட்களை எரிக்கக் கூடாது  - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் 08.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆடியோ மூலம் விழிப்புணர்வு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.