செங்கல்பட்டு: 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இன்று 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரைக்கும் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதன்பின்னர் மழை குறைந்தது. இதனால் இன்று திங்கள் கிழமை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மழை காரணமாக பள்ளிகளில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா, மழை நீர் தேங்கி நிற்கிறதா என்று குறித்து எல்லாம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையினால் தண்ணீர் தேங்கி இருப்பதால் மழை நீரை வெளியேற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார் ஆட்சியர்.
அதன்படி, அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர்.