சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்குத் தடை..

 
சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாட்கள் மட்டுமே  பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில்  4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்டு இருக்கும். அத்துடன் மலையடிவாரத்தில் உள்ள ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று மலையேறி கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆகையால் மோசமான வானிலை காலங்களில் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை..  

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்குத் தடை.. 

அந்தவகையில், நாளை (21-ந் தேதி) முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் வருகிற 23-ந் தேதி கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாளை (21-ந் தேதி) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனாலும், தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.