சந்திரயான் 3 இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

 
ISRO

சந்திரயான் 3 செயற்கைகோளை ஏவுவதற்கான முன்னோட்டம் மற்றும் பரிசோதனை திவிரமாக நடைபெற்று வருவதாகவும், இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், 75வது சுதந்திரதின அமுதப் பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக, விழா அரங்கில் பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திருந்தனர். அதனை பார்வையிட்ட சிவதாணுபிள்ளை, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார். 

இதனை தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது:  இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறமை வளரும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.நம் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லுாரி மாணவர்களால் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-3 செயற்கைகோள், இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதையொட்டி 'டிரயல், டெஸ்டிங்' நடந்து வருகிறது.சூரியனுக்கு, ஆதித்யா என்ற செயற்கைகோள், இஸ்ரோவில் இருந்து இரண்டு ஆண்டுகளில் விடப்பட உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் இருந்து இந்த செயற்கைகோள் சூரியனை ஆய்வு செய்யும். இவ்வாறு கூறினார்.